மகனுக்காக களத்தில் இறங்கிய ஸ்டாலின்! வீதி வீதியாக சூறாவளி பிரசாரம்!
மகனுக்காக களத்தில் இறங்கிய ஸ்டாலின்! வீதி வீதியாக சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாளையுடன் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் அரசியல் தலைவர்களும் இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அந்த வகையில், இன்றும் சென்னையில் வீதி, வீதியாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இன்று காலை 9 மணி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, 10 மணி துறைமுகம், 11 மணி ஆர்.கே.நகர், 11.30 மணி பெரம்பூர், நண்பகல் 12 மணி மாதவரம், மதியம் 3 மணி அண்ணாநகர், 3.30 மணி வில்லிவாக்கம், மாலை 4 மணி எழும்பூர், 5 மணி திரு.வி.க.நகர், 5.30 மணி கொளத்தூர் ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கட்சியினர் வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம் என கண்டிப்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திமுக குடும்பத்தில், உதயநிதி சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால், எப்படியும் பெரிய அளவு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கட்சிக்காரர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. சேப்பாக்கம் தொகுதி நிலவரப்படி, உதயநிதி வெற்றி பெறுவது எளிது தான் என்கிறார்கள்.
ஆனாலும், ஸ்டாலினுக்கு திருப்தி வரவில்லையாம். குறைந்தளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், மகனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி அடுத்தடுத்த பதவிகளுக்கும், அமைச்சர் பதவி தருவதிலும் சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது என்பதால், பெரியளவு வித்தியாசம் வரவேண்டும் என்று கறாராக உடன்பிறப்புகளிடம் கூறி விட்டார் என்பதால், இரவு பகலாக சேப்பாக்கம் தொகுதியில் தொண்டர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள். முன்னதாக, மகனுக்காக துர்கா ஸ்டாலினும் சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இன்று ஸ்டாலினும் உதயநிதிக்காக சேப்பாக்கம் முழுவதும் சுழன்றடித்து பிரச்சாரம் செய்தார்.