கடுமையான நிபந்தனை... முன்னாள் நீதிபதிக்கு நிபந்தனை ஜாமீன் !!
கடுமையான நிபந்தனை... முன்னாள் நீதிபதிக்கு நிபந்தனை ஜாமீன் !!
சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சி.எஸ்.கர்ணன். இவர், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. அவை தொடர்பான பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவின.
இதுகுறித்து அவர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உள்ளிட்டோர் கொடுத்த புகார்கள் அடிப்படையில் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி கர்ணனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளில் அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுக்களை தள்ளுபடி செய்தன. இதையடுத்து கர்ணன் மீண்டும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரது 10 ஜாமீன் மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தள்ளுபடியான நிலையில், நீதிபதி கர்ணன் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், நிபந்தனை அடிப்படையில் கர்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். மேலும் சென்னையில் தங்கியிருக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது, விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 50 ஆயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தை ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
newstm.in