தமிழகத்தில் திடீரென அவசர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்- சுகாதாரத் துறை கடிதம் !!

தமிழகத்தில் திடீரென அவசர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்- சுகாதாரத் துறை கடிதம் !!

Update: 2021-12-20 20:30 GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீரென கடிதம் எழுதியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது ஒமைக்ரான் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன. 

தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. எனினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். அதில், உலக நாடுகளை ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தும் நிலையில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். 

தமிழகத்தில், ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிப்பு அதிகமாகும் மாவட்டங்களில் நிலைமைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றை விட அதி வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

newstm.in


 

Similar News