சூப்பர் அறிவிப்பு.. எக்ஸ்பிரஸ் ரயில்களில் அமலாகிறது பயண கட்டணம் குறைப்பு !!

சூப்பர் அறிவிப்பு.. எக்ஸ்பிரஸ் ரயில்களில் அமலாகிறது பயண கட்டணம் குறைப்பு !!

Update: 2021-11-13 20:41 GMT

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பேருந்து, ரயில், விமானம் என அனைத்து வகையான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. ரயில்வேயும் பயணிகளின் சேவையை முழுமையாக ரத்து செய்தது. அதன் பிறகு ஊரடங்கு நேரத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு ரயில்களில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்படவில்லை. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பேருந்து, விமான சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பின. 

அந்த வரிசையில் குறுகிய தூர ரயில்களும் இயக்கப்பட்டன. ஆனால் அனைத்து ரயில்களையும் சிறப்பு ரயில்கள் அடிப்படையிலேயே ரயில்வே துறை இயக்கியது. இதனால் ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து சிறப்பு ரயில் நடைமுறையை கைவிட தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டல ரெயில்வே அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களும் சிறப்பு ரயில்களாகவும், விடுமுறை கால சிறப்பு ரயில்களாகவும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் அனைத்தும் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இயக்க அறிவுறுத்தப்படுகிறது. ரயில்வே வாரிய பயணிகள் சந்தைப்படுத்துதல் இயக்குனர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் எந்த தேதியில் இருந்து பழைய கட்டண நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. எனினும் ஒரிரு நாட்களில் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

newstm.in

Tags:    

Similar News