சூப்பர்.. இப்போது சமையல் எண்ணெய்கள் விலையும் குறைகிறது.. மத்திய அரசு எடுத்த நடவடிக்கை !!
சூப்பர்.. இப்போது சமையல் எண்ணெய்கள் விலையும் குறைகிறது.. மத்திய அரசு எடுத்த நடவடிக்கை !!
சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசலை விலை வரலாற்றில் முதன்முறையாக லிட்டருக்கு 100 ரூபாய் வரை உயர்ந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது மத்திய அரசு வரியை குறைத்தாலும் பல நகரங்களில் லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டியே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை போன்றே இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலையும் உச்சத்தை தொட்டுவருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் எண்ணெய், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.180ஐத் தொட்டது.
இந்நிலையில் அத்தியாவசிய தேவையான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 21 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 4 முதல் 15 மில்லியன் டன் எண்ணெய் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சீனாவிற்கு அடுத்து உலக அளவில் சமையல் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
உணவுக்கு நேரடியாக பயன்படுத்தும் வகையில் சுத்தகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மலேசியா, பிரேசில், அர்ஜெண்டினா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள காரணத்தால், இந்திய எண்ணெய் சந்தை சர்வதேச எண்ணெய் சந்தைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதம், இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச காரணங்களால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தபடியே இருக்கிறது.
இந்த நிலையில், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது.
newstm.in