டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை மிரட்டிய ஆப்கான்.. கடைசி வரை பரபரப்பான ஆட்டதை ஒரே ஓவரில் மாற்றிய ஆசிப் !!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை மிரட்டிய ஆப்கான்.. கடைசி வரை பரபரப்பான ஆட்டதை ஒரே ஓவரில் மாற்றிய ஆசிப் !!
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. குறிப்பாக 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் 100 ரன்களுக்குள் சுருண்டு படுதோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின் கேப்டன் முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடினர். இவர்களை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடியும் பலன் அளிக்கவில்லை. இதனால் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை எகிறச்செய்தனர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. முகமது நபி, குல்பதின் நயிப் தலா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 8 ரன்னிலும், பகர் சமான் 30 ரன்னிலும், முகமது ஹபீஸ் 10 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் ரசித் கான் பந்துவீச்சில் வெளியேறினார். உண்மையில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெறும் விளிம்புக்கு வந்துவிட்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை மடக்கினர்.
இறுதிநேரத்தில் களமிறங்கிய ஷோயப் மாலிக் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இரண்டு ஓவருக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஆசிப் அலி மட்டும் பேட்ஸ்மேனாகவும் மற்றவர்கள் அடுத்து பவுலர்களாகவும் இருந்தனர். இதனால் ஆசிப் அலியை கட்டுப்படுத்திவிட்டால் வெற்றிபெறலாம் என ஆப்கானிஸ்தான் கணக்கு போட்டு களத்தில் செயப்பட்டது.
ஆனால், 19ஆவது ஓவரில் அதிரடியாக 4 சிக்சர்களை பறக்கவிட்ட ஆசில் அலி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகளில் வென்று பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் இப்போட்டியில் தோற்றாலும் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது.
newstm.in