டெல்லியை குறிவைத்து பயங்கரவாதிகள் சதித்திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை !!
டெல்லியை குறிவைத்து பயங்கரவாதிகள் சதித்திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை !!
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் விமானப்படை தளத்தில் கடந்த மாதம் டிரோன் மூலம் தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
அதோடுமட்டுமல்லாமல் எல்லையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் நாட்டின் உளவுத்துறை அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்பே எச்சரித்து வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக இந்நாளில் பாதுகாப்பு பலப்படுத்திருக்கும்.
ஆனால் இந்தாண்டு வழக்கத்தைவிட பாதுகாப்பை தீவிரப்படுத்த டெல்லி காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்பால் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகளை உஷார் நிலையில் இருக்க உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரோன் மூலம் தாக்குதல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து விமானப்படையினரால் டிரோன் கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேலும், சுதந்திர தினவிழாவின் போது செங்கோட்டையில் 4 டிரோன் செயலிழப்பு அமைப்பு பொருத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வழக்கத்தைவிட பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
newstm.in