பிலிப்பைன்ஸில் உயிரிழந்த தேனி மாணவரின் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது..!
பிலிப்பைன்ஸில் உயிரிழந்த தேனி மாணவரின் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது..!
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உடல், அரசு செலவில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசித்து வருபவர் பாலசேகரன். இவருடைய மகன் சஷ்டி குமார். இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அருவியில் குளிக்கச் சென்றபோது சஷ்டி குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர உரிய ஏற்பாடுகளைச் செய்திடுமாறு முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து தமிழக முதல்வர், மத்திய அரசின் வெளியுறவுத்துறை உதவியுடன் தமிழக அரசின் வெளிநாட்டு தமிழன் நல ஆணையம் இணைந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த சஷ்டி குமார் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை சஷ்டி குமாரின் உடல் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்தில் அவரின் பெற்றோரிடம் உடலை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரது உடல், அரசு சார்பில் இலவச அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.