இஸ்திரி வண்டியில் இறந்து கிடந்த சிறுவன்.. சிக்கியது மற்றொரு கேமரா பதிவு..!
இஸ்திரி வண்டியில் இறந்து கிடந்த சிறுவன்.. சிக்கியது மற்றொரு கேமரா பதிவு..!
விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (45); சலவைத் தொழிலாளியான இவரது இஸ்திரி வண்டியில் கடந்த 15ம் தேதி காலை 4 வயது சிறுவன் உடல் கிடந்தது. பிரேத பரிசோதனையில், குடலில் உணவு இல்லாததால் பட்டினி சாவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு, விழுப்புரம் நகரில் உள்ள சாலைகளில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், சிறுவனை துண்டு மூலம் மூடி தோளில் தூக்கியபடி, மற்றொருவருடன் நடந்து செல்கிறார். அவர்கள், சிவகுமாரின் தள்ளு வண்டியில் சிறுவனை வைத்துவிட்டு, மீண்டும் பஸ் நிலையம் சென்று பஸ் ஏறிச் சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் இருந்து வந்த பஸ்சில் இருவரும் வந்தது தெரியவந்தது. இதனால், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு அன்றிரவு 10.50 மணிக்கு வந்த பஸ்கள் குறித்த சிசிடிவி பதிவை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
அதில், 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் பஸ் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்திற்கு நேற்று தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அங்குள்ள கலர் கேமராவில் இருவர் வந்ததற்கான காட்சி பதிவாகியிருந்தது. இதனால் அப்பகுதியில் தீவிரமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சிசிடிவியில் பதிவாகியுள்ள வீடியோவை போலீசார் அனுப்பியுள்ளனர். அதன் மூலம் ஏதேனும் துப்பு கிடைக்குமா எனவும் விசாரிக்கின்றனர். மேலும், சிறுவனை துாக்கிச் செல்லும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு 0414 222172 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு எஸ்பி ஸ்ரீநாதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.