வண்டியால் குதிரையை இழுக்க முடியாது..! - ப.சிதம்பரம் விமர்சனம்

வண்டியால் குதிரையை இழுக்க முடியாது..! - ப.சிதம்பரம் விமர்சனம்

Update: 2021-06-25 11:26 GMT

“குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும்; வண்டியால் குதிரையை இழுக்க முடியாது” என, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

மத்திய அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காஷ்மீர் அரசியல் கட்சியினர், ‘காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.
 


இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில், ‘‘காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள், முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், பின்னர் தேர்தல்களை நடத்தவும் விரும்புகிறார்கள். மத்திய அரசோ, முதலில் தேர்தல்; பின்னர் மாநில அந்தஸ்து என்று கூறுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும். மாநிலம்தான் சரியான முறையில் தேர்தலை நடத்த முடியும். ஆனால் மத்திய அரசோ, முதலில் தேர்தல் நடத்த முயலுகிறது. குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும்; வண்டியால் குதிரையை இழுக்க முடியாது” என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News