திமுக நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலை செய்தனர்; அமைச்சர் துரைமுருகன் பகீர் தகவல்..!

திமுக நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலை செய்தனர்; அமைச்சர் துரைமுருகன் பகீர் தகவல்..!;

Update: 2021-07-27 06:05 GMT

காட்பாடி சட்டமன்றத் தொகுதி வடக்கு ஒன்றிய திமுக உறுப்பினர்கள் கூட்டம் பொன்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது; “நான், 1971ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியில் மகத்தான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று வருகிறேன். குறிப்பாக, மேல்பாடி, பொன்னை பிர்கா திமுகவின் கோட்டை என்பேன்.

ஆனால் இந்த முறை கிட்டதட்ட 6 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி விட்டோம். காட்பாடி யூனியன் கிராமங்களில் பெரும்பாலான பூத்களில் ஓட்டு எண்ணும் போது நாம் பின் தங்கிதான் இருந்தோம். நமது நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும்.

அப்படி யாரெல்லாம் உள்ளடி வேலைகள் செய்தார்களோ அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. என்னை தோற்கடிக்க வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், இறைவன் அருளால் நான் வெற்றி பெற்று விட்டேன். இப்போது அவர்களுக்கும் நான்தான் அமைச்சர்.

மறப்போம்... மன்னிப்போம்... என அண்ணாதுரை சொன்னதை நினைத்து, வரும் உள்ளாட்சித் தேர்தலில் நிர்வாகிகள் இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டும். திமுக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அடியோடு திமுக.வில் இருந்து அவர்களை உடனடியாக நீக்கி விடுவேன்.

காட்பாடி யூனியன் என்னை கைவிட்டது என்ற மெத்த வருத்தம் எனக்கு உள்ளது. ஆனாலும், காட்பாடி தாராபடவேட்டிலிருந்து விருதம்பட்டு வரைக்கும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓட்டுகள், ஒருவழியாக உருட்டி பெறட்டி கடைசியில் தபால் ஓட்டுகளில் தான் நாம் வெற்றி பெற்றோம் என சொல்லலாம்.

நான் சொன்ன வாக்குறுதிகளான பொன்னையில் அரசு கலைக்கல்லூரி மற்றும் பொன்னை ஆற்று மேம்பாலம் கட்ட கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அவர் கூறினார்.
Tags:    

Similar News