பாலியல் தொழிலுக்காக காரில் கடத்தப்பட்ட சிறுமி... சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த சகோதரர்!

பாலியல் தொழிலுக்காக காரில் கடத்தப்பட்ட சிறுமி... சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த சகோதரர்!

Update: 2020-02-29 15:46 GMT

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கோயம்பேடு பகுதியில் டாடா மேஜிக் குட்டி யானை வாகனம் ஓட்டி வருகிறார். நேற்று நள்ளிரவு வேலை முடிந்து வீடு திரும்பியப்போது கோயம்பேடு பகுதியில் ஒரு காரில் இரண்டு நபர்களோடு 15 வயது சிறுமி அமர்ந்திருப்பதை பார்த்துள்ளார். அந்த சிறுமி தனது நெருங்கிய உறவினரின் மகள் என்பது தெரியவந்தது. உறவின் முறையில் சீனிவாசனுக்கு சகோதரர் ஆவார். பின்னர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு காரின் அருகே சென்றார். அப்போது தனது தங்கையிடம் பேசிய அவர், ‘‘நீ எதற்காக காரில் அமர்ந்துள்ளாய்’’ என கேட்டுள்ளார்.

அதற்குள் காரில் இருந்த நபர்கள் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் தனது டாடா மேஜிக் வாகனத்தில் அவர்களை வேகமாக பின்தொடர்ந்தார். அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் காரில் வந்தவர்களிடம், தனது தங்கையை அழைத்து வந்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறக்கவே அங்கு ரோந்து பணியில் இருந்த சூளைமேடு ரோந்து போலீசார் அங்கு வந்தனர். அப்போது காரில் இருந்த நபர்களில் ஒருவரான ஃபாசில் என்பவர் தப்பியோடி விட்டார்.

மற்றொரு நபரான பிரகாஷ் என்பவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அவரை சூளைமேடு போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிரகாஷ் மற்றும் தப்பியோடிய ஃபாசில் ஆகியோர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது. அப்போது தான் சிறுமியின் சகோதரர் சீனிவாசன் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் அவரை சகோதரர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிரகாஷ் முன்னாள் குற்றவாளி என்பது தெரியவந்தது. அவரது காரை திறந்து பார்த்த போது உள்ளே ஒரு அடி நீள பட்டாக்கத்தி ஒன்று இருந்தது தெரியவந்தது. தலைமறைவான ஃபாசிலை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமி தரப்பில் புகார் அளிக்க மறுத்ததால் பிரகாஷை கத்தி வைத்திருந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். 

newstm.in

Tags:    

Similar News