கொடுத்த நிலம் திரும்பப் பெறப்படும்.. நிறுவனங்களுக்கு அரசு செக்..!

கொடுத்த நிலம் திரும்பப் பெறப்படும்.. நிறுவனங்களுக்கு அரசு செக்..!

Update: 2021-12-19 18:23 GMT

கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சிவசங்கரரெட்டி, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூரில் தொழிற்பேட்டை அமைப்பது குறித்து கேள்வி எழுப்பி பேசினார். அதற்கு தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி பதிலளிக்கையில் கூறியதாவது:

“கவுரிபித்தனூரில் அமைக்க திட்டமிட்டுள்ள தொழிற்பேட்டை குறித்து அடுத்த 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் அந்த நிலத்தை தொழில் நோக்கத்திற்கு பயன்படுத்தாமல் வீட்டுமனைகளை அமைத்து விற்பனை செய்வதாக அரசுக்கு புகார் வந்துள்ளது.


இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிலம் ஒதுக்கீடு பெறும் நிறுவனங்கள், தொழிலை தொடங்கிய பிறகே அதன் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் தொடங்காத நிறுவனங்களிடம் இருந்து நிலத்தை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அத்தகைய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சட்ட நடவடிக்கை மூலம் அதை திரும்பப் பெறுவோம்.

மாநிலத்தில் தற்போது அமைக்கப்படும் தொழிற்பேட்டைகளில் 15 சதவீத நிலம் குடியிருப்புக்கு ஒதுக்கப்படுகிறது. இதனால் அங்கு பணியாற்றுபவர்கள் அங்கேயே வசித்துக்கொண்டு வேலைக்கு சென்று வர முடியும். இதனால் நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் எரிபொருள் செலவும் சேமிக்க முடியும்” எனக் கூறினார்.

Similar News