சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கில் தான்!!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கில் தான்!!

Update: 2022-01-02 08:10 GMT

கொரோனா பரவல் காரணமாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2021 தேர்தலுக்கு பிறகு மு..ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்திற்குப் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி செப்டம்பர் 18இல் பதவியேற்றார்.

புதிய ஆளுநர் பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் ஜனவரி 5ஆம் தேதி அன்று தொடங்கும் என்று கூறினார். இக்கூட்டத் தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்கெனவே நடைபெற்ற இடத்திலேயே தொடங்க உள்ளது என்றார்.

ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு மரபுப்படி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை தொடங்கும். அதைத் தொடர்ந்து பொது பட்ஜெட், அடுத்து மானியக் கோரிக்கைகள் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரித்துவருகின்றன. தமிழ்நாட்டிலும், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News