அடுத்த ஆபத்து !! குழந்தை, 2 பெண்கள் என மூவருக்கு 'டெல்டா பிளஸ்' கொரோனா உறுதி !!
அடுத்த ஆபத்து !! குழந்தை, 2 பெண்கள் என மூவருக்கு 'டெல்டா பிளஸ்' கொரோனா உறுதி !!
கேரளத்தில் 4 வயது குழந்தை உள்பட மூவருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2ஆவது அலை தற்போது குறைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தியாவில் தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பரவி வருவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் பரவலைத் தடுக்கும் வகையில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள ‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கொரோனா, கவலையளிக்கக் கூடியதாக வகைப்படுத்தப்படவில்லை என்று நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய வகை கொரோனா என்பதால், டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வைத்து சுகாதாரத் துறை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் ஒரே நாளில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கேரளத்தில் பத்தினம்திட்டா, பாலக்காடு ஆகிய இரு மாவட்டங்களில் ஒரு குழந்தை மற்றும் இரு பெண்களுக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அம்மாநில சுகாதாரத் துறை அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் மேலும் பரவலைத் தடுக்கும் வகையில் பரிசோதனைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
newstm.in