1 கோடியே 40 லட்சம் லிட்டர் கொண்ட உலகின் ஆழமான நீச்சல் குளம் திறப்பு... எங்கு தெரியுமா?
1 கோடியே 40 லட்சம் லிட்டர் கொண்ட உலகின் ஆழமான நீச்சல் குளம் திறப்பு... எங்கு தெரியுமா?
துபாயில் நாத் அல் செபா பகுதி அருகே மிக ஆழமான நீச்சல் குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத்துள்ளது. இந்த நீச்சல் குளம் 197 அடி ஆழம் கொண்டது ஆகும். இதில் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 1 கோடியே 40 லட்சம் லிட்டர் ஆகும். அதாவது 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவாகும்.இந்த ஆழமான நீச்சல் குளத்தில் ஹப்பர் பேரிக் பகுதி உள்ளது.
இதில் ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் பழைய பணிமனை போன்ற அமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்வதாக உள்ளது. ஸ்கூபா டைவ் எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் இதில், வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளமானது 20 அடி மற்றும் 69 அடி ஆழத்தில் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கடியில் 56 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கேற்ப வண்ணங்கள் மற்றும் ஒளி அளவை வெளிப்படுத்தும் 164 மின் விளக்குகள் ஆழமான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் தண்ணீருக்கடியில் 100 பேர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளையும் நடத்த வசதி உள்ளது.
மேலும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் எரிமலை பாறைகள் வழியாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இது நாசாவின் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.நீச்சல்குள வளாகத்தில் பரிசுப் பொருட்கள் வாங்கும் கடை, நீச்சல் செய்வதற்கு உதவும் பொருட்களை விற்பனை செய்யும் கடை, கூட்ட அரங்கு உள்ளிட்டவை அமைந்துள்ளது. 80 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான உணவகம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 வயதுக்கு மேற்பட்வர்கள் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி பெற வசதி செய்துதரப்பட்டுள்ளது. இதற்காக இணையத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளது.இந்த ஆழமான நீச்சல் குளத்தின் அளவை கின்னஸ் சாதனை நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரைவில் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் முத்து குளித்தல் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தை நேற்று துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் அங்குள்ள கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார். அவருடன் துபாய் ஊடக கவுன்சில் தலைவர் ஷேக் அகமது பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.