முகக்கவசம் அணிய மறுத்த பயணி.. விமானத்தை தரையிறக்கிய விமானி..!
முகக்கவசம் அணிய மறுத்த பயணி.. விமானத்தை தரையிறக்கிய விமானி..!
அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில் பயணித்த ஒரு பயணி, முகக்கவசம் அணிய மறுத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என விமானப் பணியாளர்கள் அந்த பயணியிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அந்தப் பயணி கேட்கவில்லை.
பயணி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததால், விமானி உடனடியாக விமானத்தை மியாமி விமான நிலையத்திற்கு திருப்பினார். மியாமி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி பெற்றார்.
விமானம் தரையிறங்கியதும், முகக்கவசம் அணிய மறுத்த அந்த பயணியை போலீசார் கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரது பயண அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட பயணியை, விமான பயணத்திற்கு தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் விமான நிறுவனம் கூறி உள்ளது.