மேலவளவு முருகேசன் உட்பட 7 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘கர்ணன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேவுள்ளது மேலளவு கிராமம். இதன் ஊராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊராட்சி தேர்தலில், ஒடுகப்பட்ட சமூக மக்கள் போட்டியிடுவதற்கு மற்ற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்தாண்டில் தேர்தல் நடைபெறவில்லை. 

பெரும் முயற்சிக்கு பிறகு  நடத்தப்பட்ட தேர்தலில் முருகேசன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து முருகேசன் உட்பட, அவருடைய ஆதரவாளர்கள் 6 பேர் தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என்று கூறி அரசிடம் மனு கொடுத்தனர். 

இந்நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்துவிட்டு முருகேசன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 6 பேர் பேருந்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை 17 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அவர்கள் அனைவரையும் போலீஸ் கைது செய்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம். கடந்த 2008-ம் ஆண்டு நன்னடத்தை காரணமாக குற்றவாளிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து எஞ்சியவர்கள் அனைவரும் 2019ம் ஆண்டு விடுதலையாகினர். தற்போது இவர்களுடைய விடுதலைக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

Tags: