பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்காவே காரணம்.. மத்திய அமைச்சரின் அடடே விளக்கம் !!

பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்காவே காரணம்.. மத்திய அமைச்சரின் அடடே விளக்கம் !!

Update: 2021-11-15 20:40 GMT

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை தினந்தோறும் அதிகரித்தே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதெல்லாம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது. ஏற்கனவே மாநில அரசுகள் செஸ் வரி விதிப்பதால் விலை உயர்ந்து கொண்டு சென்றது. இதனால் இந்தியாவில் முதல்முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டியது. இதனால் நடுத்தர மக்கள் பெரும்  அவதியடைந்தனர். மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் வலியுறுத்தின.

 நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய் அளவிற்கும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாய் அளவிற்கும் மத்திய அரசு குறைத்தது. 

இந்த நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் குறித்து மத்திய அமைச்சர் புதுமையான காரணம்  கூறியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அமெரிக்கா முடிவு செய்கிறது, மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவது தவறு என மத்திய ரயில்வேத்துறை இணைமைச்சர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்ட பேரணி நடைபெற்றது. ஆனால், எரிபொருள் விலை சர்வதேச சந்தையின் சூழ்நிலையுடன் தொடர்புடையது. ஒருநாள் லிட்டருக்கு 35 பைசா உயரும், அடுத்த நாள் ஒரு ரூபாய் குறையும். அதன்பின் ஐம்பது பைசா உயரும்.

இந்த விலை எல்லாவற்றையும் அமெரிக்கா முடிவு செய்கிறது. ஆகவே, எரிபொருள் விலை உயர்வுக்காக மத்திய அரசை குற்றம்சாட்டுவது தவறானது. மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வாட் வரியை குறைக்க தயாராக இல்லை. நாடு மத்திய அரசின் நிதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாம் இதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும், என்றார்.

newstm.in

Tags:    

Similar News