காதலனின் திருமணத்தை தடுக்க குழந்தையை கடத்திய பெண்!!

காதலனின் திருமணத்தை தடுக்க குழந்தையை கடத்திய பெண்!!

Update: 2022-01-07 19:19 GMT

காதலனை மிரட்டி அவரது திருமணத்தை தடுக்க இளம்பெண் ஒருவர் குழந்தையை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வலியத்தாரா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் – அஸ்வதி தம்பதிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு செவிலியர் உடையில் வந்த இளம்பெண் ஒருவர் குழந்தையைப் பரிசோதிக்க வேண்டும் என கூறி தூக்கிக் சென்றார். ஆனால் அவர் பல மணி நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அஸ்வதி இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறினார். பின்னர் தான் குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

போலீஸார் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் குழந்தையை நீது ராஜ் என்ற பெண் கடத்தியது தெரியவந்தது.

போலீஸார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தையை கடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

நீது ராஜ் இப்ராகிம் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இப்ராகிம் நீது ராஜிடமிருந்து ரூ.30 லட்சம் பணம் பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், நீது ராஜின் காதலை முறித்துக் கொண்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய இப்ராகிம் முடிவு செய்துள்ளார்.

இதை அறிந்த நீது ராஜ், காதலனை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் குழந்தையைக் கடத்தி அது தங்களுக்குப் பிறந்த குழந்தை என்று காதலனை மிரட்டத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

newstm.in

Similar News