அமலுக்கு வந்தும் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் - பாடாய் படுத்தும் பாஸ்டேக்!
அமலுக்கு வந்தும் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் - பாடாய் படுத்தும் பாஸ்டேக்!
இந்தியா முழுவதும் வாகன நெரிசலை தடுக்கவும், சுங்க சாவடிகளில் மணிக்கணக்கில் பணம் செலுத்துவதற்காக நிற்பதை தடுக்கும் வகையில் 2016ல் பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்த கால அவகாசம் பல முறை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்கள் அனைத்தும் பாஸ்டேக் முறையை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சுங்கசாவடிகளிலும் ஒரே ஒரு கட்டணம் செலுத்தும் திறப்பு மட்டும் இருந்து வந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஸ்டேக் மூலம் சுங்கசாவடி கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் சுங்கசாவடிகளை கடப்பதில் தற்போது நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.
பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு வழக்கமான சுங்க கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமான கட்டணம் பெறப்படுவதும், பெட்ரோல், டீசல் விலை உயர்வும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகள் இரு மடங்கு கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடி நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் பாஸ்டேக் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களும் சிக்கி தாமதமாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.