சிக்கியது சினம் கொண்ட சிறுத்தை.. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்..!
சிக்கியது சினம் கொண்ட சிறுத்தை.. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்..!
திருப்பூரில் சில நாட்களாக 7 பேரை தாக்கி அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பாப்பான்குளம் பகுதியில் கடந்த 24-ம் தேதி சோளத்தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை, வன ஊழியர் உட்பட 6 பேரை தாக்கியது.
இதையடுத்து, பெருமாநல்லுார் அருகே நியூ திருப்பூர் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றதாக அவ்வழியாக காரில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (27ம் தேதி) அம்மாபாளையம் டி கிளப் எதிரே உள்ள கம்பெனி வளாகத்தில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த காவலாளி ராஜேந்திரனை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அம்மாபாளையம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர், முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை கண்டறிந்து அதற்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர், முட்புதரை சுற்றிவளைத்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வலை மூலம் பிடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.