சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்.. வடமாநில பெண்கள் பலியான சோகம்..
சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்.. வடமாநில பெண்கள் பலியான சோகம்..
ஹரியாணா மாநிலம் சார்ஜர் மாவட்டம் பகதூர்காட் பகுதியைச் சேர்ந்த 41 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். ரயில் முலம் மதுரை வந்த அவர்கள் அங்கிருந்து 2 தனியார் வேன்கள் மூலம் அதிகாலையில் கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றனர். இந்த நிலையில், திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் நவநீதகிருஷ்ணன் வேனை நிறுத்த முயன்றார். அப்போது கோயம்புத்தூரிலிருந்து களக்காடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மோதியதில் சுற்றுலா வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. பேருந்து சாலையில் தடுப்பை தாண்டி நின்றது.
இந்த விபத்தில் வேனில் வந்த சுற்றுலாப் பயணிகளில் சாயர் (60) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இரு பெண்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவலின் பேரில் திருமங்கலம் தாலுகா காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
newstm.in