வைகுண்ட ஏகாதசி.. ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.. பக்தர்கள் பரவசம் !!
வைகுண்ட ஏகாதசி.. ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு.. பக்தர்கள் பரவசம் !!
பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வழக்கமாக மார்கழி மாதம் தான் கொண்டாடப்படும். ஆனால், 19 ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் போது, தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம்.
இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட ஆபரணங்கள் அணிந்து தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார்.
இந்த விழாவை காண்பதற்காக பக்தர்கள் ஏராளமானோர் ஸ்ரீரங்கம் வந்துள்ளனர். ஸ்ரீரங்கத்தில் மட்டுமே இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in