பள்ளிகள் திறப்பது குறித்து.. அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்..!

பள்ளிகள் திறப்பது குறித்து.. அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்..!

Update: 2022-01-29 15:03 GMT

வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததால், தமிழகத்தில் பள்ளிகளை திறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகமும் வரவேற்கிறது. அதேவேளையில், தென் ஆப்பிரிக்க நாட்டில் நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இது, மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, பள்ளிகள் திறப்பது மாணவர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில், நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழக அரசு ரத்து செய்ததோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News