தமிழ்நாட்டையும் நேசிக்கிறோம், பணி நீக்கம் இல்லை- சொமோட்டோ நிறுவனம் புதிய விளக்கம் !

தமிழ்நாட்டையும் நேசிக்கிறோம், பணி நீக்கம் இல்லை- சொமோட்டோ நிறுவனம் புதிய விளக்கம் !

Update: 2021-10-19 20:30 GMT

உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனம் சோமேட்டோ. சோமேட்டோ நிர்வாகம் இன்று ஒரு சர்ச்சையில் சிக்கி தேசிய அளவு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் பதிவிட்ட ட்விட் பிரச்சனையை வெளியே கொண்டுவந்தது. அந்த ட்விட்டில், சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதுகுறித்து சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்ட போது, பணம் திரும்பக் கிடைக்காது.

உங்களால் இந்தியில் பிரச்சினையை விளக்கமுடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ள விகாஷ், கஸ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார். அதனையடுத்து, #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது.

இதற்கு சோமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டு அறிக்கையும் வெளியிட்டது. அதேநேரத்தில் சோமேட்டோ நிறுவனம் நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவ்வாறு பேசிய நபரை பணியில் இருந்து நீக்கியதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

இந்நிலையில், சோமேட்டோ நிறுவனர்களில் ஒருவரான தீபிந்தர் கோயல் புதிய ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவை நேசிப்பது போல் தமிழ்நாட்டையும் நேசிக்கிறோம் என தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். உணவு விநியோக நிறுவனத்தில் யாரோ ஒருவர் செய்த பிரச்சினை தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது.

நாம் அனைவரும் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் பிராந்திய மொழி மற்றும் உணர்வுகளை பாராட்ட வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துள்ளோம் என தெரிவித்தார்.


newstm.in

Tags:    

Similar News