வாட்ஸ்அப் குழுக்களுக்கு ‘ஆப்பு’.. பகிரும் குழுக்களை முடக்க உத்தரவு..!
வாட்ஸ்அப் குழுக்களுக்கு ‘ஆப்பு’.. பகிரும் குழுக்களை முடக்க உத்தரவு..!
பல செய்தி நிறுவனங்களின் செய்தித்தாள்கள், புத்தகங்களை பி.டி.எஃப் ஆக மாற்றி வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கென குழு அமைத்து, வெவ்வெறு புத்தகங்கள், செய்தித்தாள்களை குழுவில் உள்ளோருக்கு பகிர்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக பகிரப்படும் இந்த பி.டி.எஃப்களை பலரும் டவுன்லோட் செய்து படிக்கின்றனர்.
பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் வர்த்தக முத்திரைகள் சட்டம் 1999 ஆகியவற்றின் படி, தனிநபர்கள் இ-பேப்பர்களை அல்லது தனியாருக்குச் சொந்தமான வெளியீட்டின் எந்தப் பக்கத்தையும் பகிரக் கூடாது.
மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். அதன்படி, சமூக வலைதள குழுக்களில் செய்தித்தாள்களை பகிர்வதை எதிர்த்து பல செய்தித்தாள் அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகி உள்ளன.
அந்த வகையில், ஹிந்தியில் வெளியாகும் ‘டெய்னிக் பாஸ்கர்’ என்னும் செய்தித்தாள் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், தங்களது செய்தித்தாளின் இ-பேப்பரை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வதாக குறிப்பிட்டு, 85 குழுக்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், இ-பேப்பர்களை அனுமதியின்றி சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை நீக்க அல்லது முடக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இந்த வழக்கை அடுத்த ஆண்டு மே மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.