சபாஷ்… இதற்காக தமிழகத்தை பாராட்டுகிறேன்..! : அமைச்சர் நிதின் கட்காரி

சபாஷ்… இதற்காக தமிழகத்தை பாராட்டுகிறேன்..! : அமைச்சர் நிதின் கட்காரி

Update: 2021-07-08 21:00 GMT

எம்ஐடி கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த காணொலி கருத்தரங்கில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “2025ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையையும், மரணத்தையும் பாதியாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.

2030ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்குவதே இறுதி இலக்கு. கடந்த ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பங்கேற்றோம். அப்போது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளோம்.

விரைவில், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் மரணத்தை 50 சதவீதம் குறைத்துவிடுவோம் அதை நிறைவேற்றுவோம். நாங்கள் வகுத்த இந்த இலக்கை இன்று வெற்றிகரமாக தமிழகம் மட்டும் ஏற்கெனவே அடைந்துவிட்டது. அம்மாநிலத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 53 சதவீதம் குறைந்துள்ளது. இதற்காக தமிழகத்தைப் பாராட்டுகிறேன்.

பாதுகாப்பான சாலைப் பயணத்துக்காக நெடுஞ்சாலையை 4 முதல் 16 பிரிவுகளாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல், வாகன உற்பத்தியாளர்களும், வாகனத்தின் ஓட்டுநர்கள், பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கக் கோரியும் வலியுறுத்தியுள்ளோம். அந்த புதிய தொழில்நுட்பங்கள் படிப்படியாக அமலாகும்” என்றார்.
Tags:    

Similar News