என்னம்மா யோசிக்கிறாங்க !! ஆம்புலன்சில் மதுபானம் கடத்தல்...!

என்னம்மா யோசிக்கிறாங்க !! ஆம்புலன்சில் மதுபானம் கடத்தல்...!

Update: 2021-06-12 11:49 GMT

புதுச்சேரியில் இருந்து ஆம்புலன்ஸில் சென்னைக்கு மது கடத்த முயன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த சபரி, சசிகுமார், கார்த்திக் ஆகிய மூவரும் ஒரு தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில், இவர்கள் நோயாளி ஒருவரை சென்னையில் இருந்து அழைத்துச் சென்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, புதுச்சேரி நகர பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை பின்புறம் ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு ஆட்டோவில் சென்று மதுபானங்கள் வாங்கி வந்து அதனை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டனர்.

அந்த ஆட்டோவின் ஓட்டுனர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் மது கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, நகர பகுதியில் வாகனத்தை பிடிப்பதற்கு போலீசார் முற்பட்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் நகர பகுதியை வேகமாக கடந்ததால் புறநகர் பகுதியான வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, வில்லியனூர் உளவாய்க்கல் பகுதி அருகே போலீசார் தடுப்பு அமைத்து அவ்வழியே வந்த ஆம்புலன்ஸை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, அதில் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 20 அட்டைப் பெட்டிகளில் மதுபானம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, வாகன ஓட்டுனர் மற்றும் உதவியாளர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணயில், தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் இல்லாத காரணத்தால் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கிச் சென்று சென்னையில் விற்பனை செய்ய இருந்தாக தெரிவித்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News