‘மீதமுள்ள 68.58 கோடியின் நிலை என்ன..!’ : அரசிடம் கேட்கிறது ஐகோர்ட்..!
‘மீதமுள்ள 68.58 கோடியின் நிலை என்ன..!’ : அரசிடம் கேட்கிறது ஐகோர்ட்..!;
கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பார்வையற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிவாரண உதவி வழங்கும் திட்டம், பார்வையற்றவர்களுக்கு பொருந்தாது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பார்வையற்றவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரினார்.
மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும்; கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க 133 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, அதில் 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாயை மட்டுமே வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வாதிட்டார்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்த 133 கோடி ரூபாயில் மீதமுள்ள 68.58 கோடி ரூபாயின் நிலை என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 133 கோடி ரூபாய் தொகை எப்படி விநியோகிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.