எங்க ஊர் சாலையால் திருமணம் நடக்கவில்லை: முதலமைச்சருக்கு ஆசிரியை கடிதம் !
எங்க ஊர் சாலையால் திருமணம் நடக்கவில்லை: முதலமைச்சருக்கு ஆசிரியை கடிதம் !
மோசமான சாலைகளால் திருமணம் நடக்கவில்லை என்று ஆசிரியை ஒருவர், முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டத்தில் ஹெச்.ராம்புரா என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியையான 26 வயது இளம்பெண் பிந்து, முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், எங்கள் பகுதியில் சாலைகள் மோசமாக இருக்கின்றன. எங்கள் ஊரில் பலருக்குத் திருமணமாகவில்லை. அதற்கு மோசமான சாலைகள்தான் காரணம். இந்த ஊரில் திருமணம் செய்தால் குழந்தைகள் வெளியூர் சென்று கல்வி பயில சரியான சாலைகள் இல்லை என்று வெளியூர்க்காரர்கள் நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தங்கள் கிராமத்திற்கு வந்து பெண் எடுக்கவும், பெண் கொடுக்கவும் பலரும் முன்வராததால் திருமணமாகாமல் பலரும் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆசிரியையின் கடிதம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பஞ்சாயத்து அதிகாரி, நாங்கள் இந்த சாலையை மேம்படுத்த, ஏற்கனவே 1-2 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஆனால் அது போதுமானதாக இல்லை. எங்களுக்கு ரூ.50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் தேவை. இதற்காக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம், நிதி கிடைத்ததும் உடனே அச்சாலை முழுமையாக சீரமைக்கப்படும் என கூறினார்.
newstm.in