குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார்? சைபர் க்ரைம் விசாரணை!
குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார்? சைபர் க்ரைம் விசாரணை!
திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருந்த நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் ஐக்கியமானார். சமூக வலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, அவ்வப்போது அரசுக்கு எதிரான விமர்சனங்களையும், காரசாரமான விவாதங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டது. சுமார் 1.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட அவரது ட்விட்டர் கணக்கில் இருந்த அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டதுடன், படம் மற்றும் பெயரும் மாற்றம் செய்யப்பட்டது.
இது குறித்து குஷ்பு கடந்த 20ம் தேதி தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். தனது ட்விட்டர் கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக புகார் அளித்திருப்பதாக அவர் விளக்கம் அளித்திருந்தார். குஷ்புவின் புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், “குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என்பதை தெரிவிக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். அவரது ட்விட்டர் கணக்கை மீண்டும் அவரிடமே வழங்க வேண்டும்” என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.