மனைவியை கொன்ற சந்தேகம்.. கணவரும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!
மனைவியை கொன்ற சந்தேகம்.. கணவரும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!
ஊத்தங்கரை அருகே மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற கணவன் தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்(38). இவர் கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா(32). இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கேரளாவிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் சக்திவேல் தன்னுடைய மனைவி நதியாவிடம் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
அதன்படி நேற்றும் கணவர் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல், நதியாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். மனைவி இறந்ததை அறித்தும் திகைப்படைந்த சக்திவேல் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in