“தமிழகத்தில் நடப்பு ஆண்டு நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா..? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் எழுந்துள்ளது'' என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக மாணவர்களுக்கு திமுக வாக்குறுதி அளித்தது. சட்டசபை கூட்டத்தொடரில், இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா, இல்லையா..? என கேள்வி எழுப்பினேன். நீட் இருப்பின் அதற்கு மாணவர்கள் தயார் ஆக வேண்டுமா வேண்டாமா..? என கேட்டபோது முதல்வர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

தற்போதைய அரசின் முடிவால், நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடக்குமா நடக்காதா..? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா, வேண்டாமா..? என மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு தமிழக மாணவர்கள் நீட்தேர்வில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

Tags: