தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பா..? - அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்..!

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பா..? - அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்..!

Update: 2021-12-14 14:14 GMT

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “உலகில் 50 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் 41 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கும், அவர் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் எஸ்.ஜீன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவர்களின் மாதிரிகள் பெங்களூரு ஆஸ்பத்திரிக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு பரிசோதனை முடிவுகள் இன்று மாலையோ அல்லது நாளையோ தெரிய வரும். ஆனால், ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 29 மாதிரிகளில் 4 மாதிரிகள் சாதாரண டெல்டா வகை என திரும்ப வந்து விட்டது.

திருச்சி அரசு மருத்துவமனை ஒமைக்ரான் வார்டில் சிகிச்சை பெறும் 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்படவில்லை. ஏழு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் செலுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.

Similar News