புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதால்... ஆட்டம் பாட்டத்துடன் போராட்டக்களத்தில் இருந்து விடைபெற்ற விவசாயிகள்..!

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதால்... ஆட்டம் பாட்டத்துடன் போராட்டக்களத்தில் இருந்து விடைபெற்ற விவசாயிகள்..!

Update: 2021-12-11 20:00 GMT

ஒன்றிய அரசு கடந்த 2020-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் புதிதாக 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டடம், விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவை சட்டம், விவசாயிகள் விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் ஆகியவை அந்த 3 வேளாண் சட்டங்கள்.

இது விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சட்டங்களை திரும்ப பெறுமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனாலும் ஒன்றிய அரசு திரும்ப பெறவில்லை.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி டெல்லி எல்லையில் விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக கூறினார். நாடாளுமன்றத்தில் முறைப்படி சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.

இருப்பினும், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வேண்டும், விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் நிபந்தனை விதித்தனர். அவற்றை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டதால், போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர்.

இந்தநிலையில், டெல்லியை ஒட்டிய சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய எல்லைகளில் ஓராண்டுக்கு மேல் முகாமிட்டிருந்த விவசாயிகள் வீடு திரும்புவதற்கான ஆயத்த பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.

இதற்காக தங்கள் கூடாரங்களை அகற்றினர். ஒருவருக்கொருவர் உதவி செய்ய கூடாரங்களை பிரித்தனர். தார்ப்பாய், ஏணி, கம்புகள், கயிறுகள், படுக்கை விரிப்புகள், கம்பி வேலிகள், கொசு வலைகள், பி.வி.சி. ஷீட்கள் ஆகியவற்றை வாரி சுருட்டி வாகனங்களில் ஏற்றினர். வாஷிங்மெஷின், உடற்பயிற்சி கருவிகள் போன்றவற்றையும் ஏற்றினர்.

கூடாரம் அமைக்கும்போது நிறைய நேரம் இருந்ததால், பொறுமையாக அமைத்ததாகவும், தற்போது அவசர அவசரமாக பிரிக்க வேண்டி இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இளைஞர்கள், டிராக்டர்கள் சரியாக இயங்குகிறதா என்று சரி பார்த்தனர். டிராக்டருடன் கூடிய டிராலிகளை சுத்தம் செய்தனர். பெண் விவசாயிகள், சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை டிபன் செய்து அனைவரும் ஒருவொருக்கொருவர் பறிமாறிக்கொண்டனர்.

போராட்டக் களத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டதையடுத்து  ஆட்டம் பாட்டத்துடன் போராட்டக்களத்தில் இருந்து விவசாயிகள் விடைபெறுகின்றனர். விவசாயிகள் அவரவர் வீடுகளுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.


 

Tags:    

Similar News