விசிக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்.. மனைவி மற்றும் மாமியார் கைது..!
விசிக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்.. மனைவி மற்றும் மாமியார் கைது..!
நாகையை அடுத்த பாப்பாக்கோவில், திடீர்நகர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை செயலாளரான இவருக்கு அனுசுயா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி 14-ம் தேதி பொங்கல் அன்று அதிகாலை ராஜ்குமார் உடல் கருகிய நிலையில் அவரது மாமியார் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் எந்த தகவலும் கிடைக்காததால் ராஜ்குமாரின் மனைவி மற்றும் மாமியாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மனைவி அனுசுயாவை சந்தேகப்பட்டு ராஜ்குமார் துன்புறுத்தி வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்து தனது தாய் நிர்மலாவுடன் சேர்ந்து இரவு உணவில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததும், பின்னர் ராஜ்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அனுசுயா, நிர்மலா ஆகியோரை கைது செய்தனர். வி.சி.க பிரமுகர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனைவி மாமியார் கைது செய்யப்பட்டிருப்பது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.