சக வீரர் கொலை.. தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது !!
சக வீரர் கொலை.. தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது !!
இந்தியாவுக்கு பதக்கம் வென்றுகொடுத்தவர் பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார். இவர் கடந்த வாரம் சக மல்யுத்த வீரரான சாகர் தான்கட்டை அவரின் வீட்டிலிருந்து டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கிற்கு அழைத்து வந்துள்ளார். சுஷில் குமாருடன் அவரது நண்பர்களும் சிலர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த அரங்கில் வைத்து சாகர் தான்கட்டை, சுஷில் குமார் மற்றும் அவரின் நண்பர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மூச்சு பேச்சி இன்றி அவர் மயங்கிவிழுந்த நிலையில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக சாகர் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், மல்யுத்த வீரர் சுஷில் குமாரை தேடி வந்த நிலையில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றியுள்ளனர். புகாரை சுஷில் குமார் தரப்பு மறுத்தாலும் அவர் இன்னும் தலைமறைவாகவே இருந்தார்.
அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க டெல்லி போலீஸ் ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு நடவடிக்கை எடுத்திருந்தது. மேலும் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் டெல்லி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
மேலும் சுஷில்குமார் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், அவரது நண்பர் அஜய் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் சன்மானமாக வழங்கப்படும் என டெல்லி காவல்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சுஷில் குமாரை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை போலீஸ் அதிகாரி நிரஜ் தாக்வர் இன்று உறுதி செய்துள்ளார். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் சாகர் தான்கட் கொலைக்கு காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
newstm.in