நாயை படகில் கட்டி வைத்து கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற இளைஞர்கள்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..!!

நாயை படகில் கட்டி வைத்து கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற இளைஞர்கள்.. பதறவைக்கும் வீடியோ காட்சி..!!

Update: 2021-07-02 12:09 GMT

கேரள மாநிலத்தில், மூன்று பேர் சேர்ந்து ஒரு நாயை அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள அடிமலதுராவைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். இவரும், இவருடைய சகோதரர்களும் சேர்ந்து கறுப்பு நிற லாப்ரடார் என்ற இனத்தைச் சேர்ந்த நாயை புருனோ என பெயரிட்டு கடந்த 8 வருடமாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இந்த நாய் காணாமல் போனது.

இதையடுத்து, கிறிஸ்துராஜூம், அவருடைய சகோதரர்களும் நாய் புருனோவை தேடிவந்தனர். இந்நிலையில், அடிமலதுரா பகுதி  கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகில், நாய் புருனோவை கயிறால் கட்டிப் போட்டு 3 பேர் சேர்ந்து கம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதில், புருனோ இறந்தது.


இதுகுறித்து நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜ், விழிஞம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் விலங்குகள் மீதான கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தில் யாரையும் இன்னும் கைது செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து மார்ட்டின் என்பவர் கூறுகையில், “இந்த புருனோவை ஒரு வயதாக இருக்கும்போது எங்கள்  வீட்டிற்க்கு அழைத்து வந்தோம்.  இந்த ஊரடங்கு முடிந்தவுடன் இதேபோல் இன்னொரு நாயை வளர்க்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். திங்கள்கிழமை காலை நாய் காணாமல் போன உடன் நாங்கள் ஆளுக்கொரு பக்கம் தேடும் முயற்சியில் இருந்தோம்.

அப்போது அண்ட்ரியூஎன்பவர்  இந்த நாயை கடற்கரையில் பார்த்துள்ளார். அப்போது, அந்த நாயைக் கொடுமைப்படுத்தி, தூக்கி வீசிக்கொண்டிருந்ததை கண்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

சோனி என்பவர் கூறுகையில், “நாயை அடித்துக் கொன்ற அந்த மூன்று பேரும் இறந்த நாயை கடற்கரை ஓரமாக புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை நாங்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, புருனோவுக்கு நடந்த கொடுமையை வெளியுலகுக்குச் சொன்னோம்” என்றார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷிலுவயன் (20) மற்றும் சுனில் (22) ஆகியோரை கைது செய்த போலீஸார், அவர்கள் மீது விலங்குகளை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News