யூ-டியூப்பும் குற்றவாளிதான்.. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி..!

யூ-டியூப்பும் குற்றவாளிதான்.. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி..!

Update: 2022-01-20 15:30 GMT

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால், நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளாமல் தொடர்ந்து அவர் அவதூறு கருத்துகளை பேசி யூ-டியூப்பில் வீடியோக்களை பதிவிட்டு வருவதால், சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் யூ-டியூப்பும் குற்றவாளிதான். ஏனெனில், யூ-டியூப்பை பார்த்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது என குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் தருகின்றனர். எனவே, அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம், தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூ-டியூப் நிறுவனமும் உடந்தையா? என்றும், யூ-டியூப்பிற்கு ஏன் மொத்தமாக தடை விதிக்க கூடாது? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்றும் தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், யூ-டியூப்பில் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தொடர்பாக சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

Similar News